புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் 23 பேரின் வங்கிக் கடனை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஷ் குமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சிஆர்பிஎஃப் படையில் பணியாற்றும் அனைத்து வீரர்களும் பாரத ஸ்டேட் வங்கியில் மாத ஊதியக் கணக்கு வைத்துள்ளனர். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களில், 23 பேர் எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், நிலுவையில் இருக்கும் அவர்களின் கடன் தொகை முழுவதையும் உடனடியாக ரத்து செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 30 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்தக் காப்பீட்டுத் தொகையை விரைவில் அளிப்பதற்கான நடவடிக்கைகளை வங்கி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. நாட்டைக் காப்பதற்காக எல்லையில் நின்ற வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது. இந்த நிலையில், வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலளிக்கும் விதமாக, அவர்களின் வங்கிக் கடன் ரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிக்கையில் ரஜினீஷ் குமார் தெரிவித்துள்ளார்.