பெங்களூரு: புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக மாதா அமிர்தானந்த மயி தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக மாதா அமிர்தானந்த மயி தெரிவித்துளார்.
இதுதொடர்பாக மாதா அமிர்தானந்த மயி மடம் சார்பாக செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு மாதா அமிர்தானந்த மயி மடம் தலா ரூ.5 லட்சம் வழங்க உள்ளது.
நாட்டைக் காக்க வேண்டும் என்ற தங்களது தர்மத்திற்காக உயிர் நீத்த அந்த வீரர்களின் குடும்பங்களை ஆதரிப்பது என்பது நமது தர்மமாகும்.
மரணமடைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு எனது இதயபூர்வ ஆதரவைத் தெரிவிக்கிறேன். அவர்களது நல்வாழ்விற்கும் மன சமாதானத்திற்கும் நாம் அனைவ்ரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதா அமிர்தானந்த மயி 2019-ஆம் ஆண்டுக்கான தனது பாரத சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக வட மாநில பயணத்தில் இருப்பதால், அவர் சார்பாக மாதா அமிர்தானந்த மயி மடம் நிதியுதவியை அறிவித்துள்ளது.