காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைகளில் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஒருமனதாக தீர்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுவதை வரவேற்பதாக முன்னாள் முதல்வர் சிவராஜ் செளகான் மற்றும் முதல்வர் கமல்நாத் ஆகியோர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
முன்னதாக, மத்தியப் பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளான திங்கள்கிழமை மறைந்த முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முன்னாள் கோவா ஆளுநர் பானு பிரகாஷ் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சாப்: பஞ்சாப் மாநில சட்டப்பேரவையிலும், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அத்தாக்குதலில் இறந்து போன 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு உதவும் வகையில் மாநில எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்தனர்.
இதுதொடர்பாக, திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை காங்கிரஸ் எம்எல்ஏ பர்மீந்தர் சிங் பிங்கி கொண்டு வந்தார்.