இந்திய அரசு எங்களை தாக்க நினைத்தால், நாங்களும் பதிலடி தருவோம் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை பாக். பிரதமர் ஒப்புக்கொள்ளாததில் ஆச்சரியமில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு அவரிடம் இருந்து கண்டனங்களோ அல்லது உயிரிழந்த வீரர்களுக்காக இரங்கல் கூட தெரிவிக்கப்படவில்லை.
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து கருத்து தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார். ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு மற்றும் அதன் தலைவன் மசூத் அசார் ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்த ஒரு ஆதாரமே பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க போதுமானது.
ஆனால், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு போதிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று இம்ரான் கான் கூறியுள்ளது வெறும் நொண்டிச்சாக்கு ஆகும். முன்பே 26/11 மும்பை தாக்குதல் தொடர்பாக போதிய ஆதாரங்கள் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இதற்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
அதேபோன்று பதான்கோட் விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பாகிஸ்தானின் வெற்று வாக்குறுதி மட்டும் தான். தற்போதைய 'புதிய பாகிஸ்தானில்' ஜ.நா.வால் குற்றம்சாட்டப்பட்ட ஹஃபீஸ் சயீது போன்ற சர்வதேச பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் அமைச்சர்கள் வெளிப்படையாக தொடர்பு வைத்திருப்பது தான் ஆகும்.
எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அதையே தான் இந்தியாவும் தெரிவித்து வருகிறது. ஆனால், முதலில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். அதுவரை இதில் எந்த உடன்பாடும் ஏற்படாது.
பயங்கரவாதத்தால் பாகிஸ்தானுக்கு தான் பேரிழப்பு, அதுதான் உண்மையும் கூட. சர்வதேச அளவில் பாகிஸ்தானில் இருந்து தான் பயங்கரவாதம் வளர்வது அனைவருக்கும் அறிந்தது தான் என்றிருந்தது.