மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகை ரூ.28,000 கோடி: ரிசர்வ் வங்கி முடிவு

மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது,
ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர்.
ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர்.


மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது, நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவின் கூட்டம், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர், மத்தியக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக ரிசர்வ் வங்கி சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கடந்த 2018, டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான 6 மாதங்களுக்கான ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார தணிக்கை மற்றும் மூலதன கட்டமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ரிசர்வ் வங்கி சட்டம்-1934இன் 47-ஆவது பிரிவின்படி, உபரித் தொகையை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்குகிறது. கடந்த 2017-18 (ஜூலை-ஜூன்) நிதியாண்டில் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.30,663 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தது. தற்போது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உபரித் தொகையை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கவுள்ளது.
மத்திய இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-20ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெரும் வங்கிகள் தேவை: முன்னதாக, ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடந்த நான்கரை ஆண்டுகளாக வங்கித் துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்த்திருத்த நடவடிக்கைகள், கொள்கை முடிவுகள் குறித்து விரிவாக பேசினார்.
மேலும், வங்கிகள் இணைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசியதாவது:
கடந்த 2017-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கியுடன், 5 துணை வங்கிகளும், பாரத மகிளா வங்கியும் இணைக்கப்பட்டன. இதன் மூலம் கிடைத்த நல்ல பலன்களால், அடுத்த இணைப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பரோடா வங்கியுடன் தேனா, விஜயா வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. வங்கித் துறையில் நாம் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்கு, இந்த நடவடிக்கை அவசியமானது. நாட்டுக்கு பெரும் வங்கிகள்தான் தேவை என்றார்.
மேற்கண்ட மூன்று வங்கிகளின் இணைப்பு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 18-ஆக குறையும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்தில் நிதியமைச்சர் உரையாற்றுவது வழக்கமாகும். தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com