ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தெரிந்தே உண்மைக்கு மாறான தகவல்களை நீதிமன்றத்தில் அளித்த மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் செளரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் விவரம் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, அந்த வழக்கில் பல்வேறு சமயங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை மத்திய அரசின் அதிகாரிகள் மூடி முத்திரையிட்ட தாள்களில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதன்காரணமாக, அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, பொய்யான தகவல்களை அளித்து, தவறாக வழிநடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அந்த ஒப்பந்தம் விசாரணை நடத்தக் கோரி எம்.எல்.சர்மா என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் முதன்முதலில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து வழக்கு தொடுத்த வினீத் தாண்டா என்ற வழக்குரைஞர், முறைகேடு குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என கோரியிருந்தார். அதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் செளரி மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதான முகாந்திரம் எதுவும் இல்லை என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.