அமலாக்கத் துறை விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஆஜராகாமல் தவிர்த்துள்ளார். இதற்கு உடல்நிலை சரியில்லை என்று காரணமாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
லண்டனில் சொத்துகள் வாங்கப்பட்டது தொடர்பாக ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் 3 நாள்களாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா செவ்வாய்க்கிழமை ஆஜராவதாக இருந்தது. ஆனால் ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை. இதுகுறித்து அமலாக்கத் துறை விசாரணை அதிகாரிகளிடம், ராபர்ட் வதேராவின் உடல்நிலை சரியில்லை, ஆதலால் விசாரணையில் அவரால் ஆஜராக முடியாத நிலை உள்ளது என்று வதேராவின் வழக்குரைஞர்கள் தெரியப்படுத்தினர்.
அமலாக்கத் துறை விசாரணை முன்பு புதன்கிழமை அல்லது இருதரப்புக்கும் ஏற்கக்கூடிய ஏதேனும் ஒரு நாளில் ராபர்ட் வதேரா ஆஜராகலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பிகானீர் நில பேர விவகாரம் தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை தனியாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இன்னொரு வழக்கையும் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஜெய்ப்பூர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையிலும் ராபர்ட் வதேரா ஆஜராகி வருகிறார்.