ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த கேரளத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
கடந்த 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரரான வி.வி.வசந்த்குமாரும் (44) ஒருவர். வசந்த்குமாருக்கு ஷீனா என்ற மனைவியும், அமன்தீப் (5) என்ற மகனும், அனாமிகா (8) என்ற மகளும் உள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வசந்த்குமாரின் மனைவி ஷீனா கால்நடை பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு பணி நிரந்தரமாக்கப்படும். வயநாடு மாவட்டத்தில் அரசு சார்பில் புதிதாக வீடு கட்டித்தரப்படும். அவரது மனைவிக்கு ரூ.15 லட்சமும், அவரது தாயாருக்கு ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.