ஒருநாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு வந்த சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வரும் முன்பு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்று அவர் கூறியிருந்தார்.
சவூதி இளவரசர் வருகை குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. வழக்கான நடைமுறைகளைக் கைவிட்டு, பிரதமர் மோடி நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று இளவரசரை வரவேற்றார். சவூதி இளவரசர் இப்போதுதான் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை தருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதன்கிழமை பிரதமர் மோடியும், முகமது பின் சல்மானும் அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்துகின்றனர். அப்போது, பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவி வருவது குறித்து இந்தியாவின் அதிருப்தியை அவரிடம் மோடி தெரிவிப்பார். இது தவிர பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, கூட்டு ராணுவப் பயிற்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்துவார்கள். முகமது-பின்-சல்மான் சவூதி அரேபிய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு கூட்டறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதில், பயங்கரவாத ஒழிப்பு குறித்த விஷயங்கள் இடம் பெறும், 5 ஒப்பந்தங்கள் வரை கையெழுத்தாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு பாகிஸ்தான் செல்லும் சவூதி இளவரசர், பின்னர் அங்கிருந்து தாய் நாடு திரும்புகிறார்.