சென்னை: குறைந்த தொகுதிகளை ஒப்புக் கொண்டு கூட்டணியில் இணையும்படி தேமுதிகவை சாமாதானப்படுத்த அதிமுக தரப்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தேமுதிகவின் சுதீஷ் உள்ளிட்டோரிடம் தமிழக அமைச்சர் தங்கமணி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, அதிமுக தலைமையிலான கூட்டணியில், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பாமக இணைவது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு, பாஜகவுக்கு 5 தொகுதிகளும், பாமகவுக்கு 7 தொகுதிகளும் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அதே சமயம் இந்த கூட்டணியில் இடம்பெறுவது குறித்து தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை நேற்று முதல் இழுபறியில் உள்ளது. பாஜகவை விட அதிகமாகவும், பாமகவுக்கு இணையாகவும் தொகுதிகளைப் பெற தேமுதிக திட்டமிட்டுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இணையாக அல்லது அதற்கும் குறைவான தொகுதிகளையே வழங்கும் முடிவில் அதிமுக உள்ளது.
இதுவே கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறிக்குக் காரணமாக உள்ளது. இந்த நிலையில், இன்று மாலை சுதீஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணி ஒப்பந்தத்தை முடிவு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது.