எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு ராணுவத்துக்கு நமது ராணுவ வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர். இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
ரஜௌரி மாவட்டத்தின் நௌஷெரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறிய ரக பீரங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு நமது வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, ஜம்மு பிராந்தியத்தில் தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் 2,936 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவாகும்.