ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களை போல் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.
மதுரை மாவட்டம் பெரியார் தாலுக்காவில் டி. கிருஷ்ணாபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அணை கட்ட கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது,
"ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் தடுப்பணைகளை கட்டுகின்றன. ஆனால், தமிழகம் அதுபோல் எந்தவொரு அணையும் கட்டாதது ஏன். தமிழகத்தில் நல்ல மழை இருக்கும் காலங்களில் கடலில் கலக்கும் நதி நீரை தடுப்பதற்கு தடுப்பணைகள் கட்டுவது தமிழக அரசின் கடமையாகும்" என்றனர்.
மேலும்,
தமிழகத்தில் மொத்தம் எத்தனை நதிகள் உள்ளன, அவற்றின் கொள்ளளவு எத்தனை, கடலில் எவ்வளவு நீர் கலக்கின்றது, கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட தகவல்களையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.