புது தில்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பொது செயல் திட்டம் வகுப்பதற்காக திட்டமிடப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான மஹா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்காட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கடந்த 13-ஆம் தேதியன்று தில்லியில் உள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லாவின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா மற்றும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்தும் பொருட்டு ஒரு ஒப்பந்தத்தினை உருவாக்குவது என்றும்,பொதுச் செயல் திட்டம் ஒன்றை வகுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனை உருவாக்கும்பொறுப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் வழங்கப்பட்டது. இந்த கூட்டமானது வரும் 26-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்புக் கட்டட அரங்கில் நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்து.
இந்நிலையில் பொது செயல் திட்டம் வகுப்பதற்காக திட்டமிடப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்தற்காக அந்த கூட்டம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ராகுல் தாக்கல் செய்யவுள்ள பொது செயல் திட்டமானது அனைவரது ஆலோசனைக்குப் பின்னர் இறுதி செய்யப்படும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.