"காஷ்மீருக்கு சுதந்திரம்": 2 கேரள மாணவர்கள் தேசத் துரோக வழக்கில் கைது
"காஷ்மீருக்கு சுதந்திரம்" என்ற வாசகம் கொண்ட சுவரொட்டியை கேரள மாநிலம் மலப்புரம் அரசு கல்லூரி வளாகத்தில் ஒட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 2 மாணவர்கள் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களையும், தேசப் பற்றையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் போன்ற கூற்றுகளும் இந்தியா முழுவதிலும் பரவலாக பரவி வந்தது.
இந்த உணர்வுகளின் வெளிப்பாடாக ஒரு சில மாநிலங்களில் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் மீதும், காஷ்மீர் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை வலுக்கட்டாயமாக தேசப் பற்று வாசகத்தை தெரிவிக்கக் கோரி தாக்குதல் நடைபெற்று வருவதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள அரசு கல்லூரி வளாகத்தில் முகமது ரின்ஷத் மற்றும் முகமது ஃபரீஸ் எனும் 2 மாணவர்கள் "காஷ்மீருக்கு சுதந்திரம்" என்ற வாசகம் கொண்ட சுவரொட்டியை ஒட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.