உத்தரப் பிரதேசத்தின் பதோஹி நகரில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பதோஹி நகரின் ரோஹ்தா பஜார் பகுதியில் கலியார் மன்சூரி என்பவரது கடை அமைந்துள்ளது. அந்தக் கடைக்குப் பின்புறம் மன்சூரியின் மகன் கம்பளத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், மன்சூரியின் கடையில் சனிக்கிழமை மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட அதிர்வில் அருகிலுள்ள 3 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில், இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.
கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டாசு தயாரிப்பு?: வெடிவிபத்து ஏற்பட்ட கடையில் கலியார் மன்சூரி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்ததாக அந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள் புகார் தெரிவித்தனர்.
முதல்வர் யோகி இரங்கல்:
பதோஹி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.