புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், பயங்கரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் தற்போது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் குறித்து அடையாளம் காணப்பட்டது.
அப்போது நடைபெற்ற விசாரணையில், தாக்குதல் நடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் அந்த காரின் உரிமையாளர் சஜ்ஜித் பட், தப்பிச் சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.
இவன் அனாந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிஜ்பெஹாரா பகுதியைச் சேர்ந்தவன். தந்தை மக்பூர் பட் ஆவார். சோபியானில் உள்ள சிராஜ்-உல்-உலூம் பள்ளியில் படித்துள்ளான். பயங்கர ஆயுதங்களுடன் சஜ்ஜித் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது.