பனாஜி: நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் கோவாவில் மட்டும் கொண்டாட்டங்கள் தேவையா என்று மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசு மீது காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியான கோவாவில் இந்த வார இறுதியில் வருடாந்திர சுற்றுலாத் திருவிழா மற்றும் வைன் திருவிழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் கோவாவில் மட்டும் கொண்டாட்டங்கள் தேவையா என்று மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசு மீது காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக வியாழன் அன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ் சோடங்கர் கூறியதாவது:
நமது நாடு ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கும் தருணத்தில், நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பத்திரமாக திரும்ப வர வேண்டுமே என்று கவலைபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரை முதல்வராகக் கொண்டுள்ள கோவா மாநில அரசால் எப்படி வைன் திருவிழா , சுற்றுலாத் திருவிழா மற்றும் நடன விழாக்கள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்க முடிகிறது?
கர்நாடக மாநில பாஜக தலைவரான எடியூரப்பா, பாலகோட் தாக்குதல் சம்பவத்தின் காரணமாக பாஜக கூடுதல் வாக்குகளைப் பெறலாம் என்று கூறியுள்ளார். இத்தகைய ஒரு தருணத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது முறையாகுமா?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.