அஸ்ஸாம் மாநிலத்தில் கிராமத் தலைவரை அடித்துக் கொன்றதாகக் கூறி, இரண்டு பேரை வன்முறைக் கும்பல் புதன்கிழமை அடித்துக் கொன்றது.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
பிஜ்னி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட கர்காவ்ன் கிராமத் தலைவரான கெளரங்க தாஸை, அதே கிராமத்தைச் சேர்ந்த இருவர் செவ்வாய்க்கிழமை கொலை செய்து சடலத்தைப் புதைத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
காணாமல் போன கெளரங்க தாஸை கிராமம் முழுவதும் தேடி வந்த அவரது உறவினர்கள், அவரது சடலத்தை புதைகுழியிலிருந்து புதன்கிழமை மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கெளரங்க தாஸை கொலை செய்து புதைத்ததாக இருவர் மீது குற்றம் சாட்டிய உறவினர்கள், அந்த இருவரையும் கடுமையாகத் தாக்கினர். அதில் அந்த இருவரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸாருக்கு சிலர் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவப் பகுதிக்கு போலீஸார் விரைந்தனர்.
எனினும், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.