
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 31-ஆம் தேதி அறிவித்தது.
இதனிடையே திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோரது சார்பில் புதன்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட இருவரது மனுவையும் உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுள்ளது. மேலும் மனு மீது விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.