மீரட்: ஐஎஸ்ஐஎஸ் மாதிரி பயங்கரவாத அமைப்பினர் கைது விவகாரத்தில், ஆயுதங்களை அளித்த முக்கிய குற்றவாளியான 21 வயது இளைஞர் கைது செய்யயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பிறகு செய்யப்பட்ட தொடர் கண்காணிப்பு மற்றும் ரகசிய விசாரணைகளின் அடிப்படையின் அந்த அமைப்பின் பெயர் ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்பதும், இந்த அமைப்பானது வட இந்தியாவில் குறிப்பாக தில்லியில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்தது. இந்த பயங்கரவாத குழு கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளது என்பதும், இதில் 20 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குழு தொடர்பாக கிடைத்த தகவலை கொண்டு தேசிய புலனாய்வு ஆணையம் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் கடந்த வாரம் புதனன்று (26.12.18) அதிரடி சோதனையை நடத்தியது.
தில்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் இந்த குழுவின் தலைவர் உட்பட குழுவுடன் தொடர்புடைய 10 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் இருந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி அசிம் அருண் கூறியுள்ளார். மேலும் ஐந்து பேர் வடகிழக்கு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனைகள் வேறு சில இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் மாதிரி பயங்கரவாத அமைப்பினர் கைது விவகாரத்தில், ஆயுதங்களை அளித்த முக்கிய குற்றவாளியான 21 வயது இளைஞர் கைது செய்யயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நயீம் என்ற 21 வயது வாலிபர், ஆயுதங்களை சப்ளை செய்த குற்றச்சாட்டின் பேரில் வியாழன் இரவு கைது செய்யப்பட்டுள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது.