இணையவழியில் (ஆன்லைன்) மருந்துப் பொருள்களை விற்பனை செய்யப்படுவதை முறைப்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகள் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் இறுதி
செய்யப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான பொதுநல வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நரேஷ் பாட்டீல், நீதிபதி என்.எம்.ஜாம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.பி.சிங் கூறியதாவது:
இணையவழி மருந்து விற்பனையை முறைப்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே வகுத்துள்ளது. இதுதொடர்பாக, பல்வேறு நிபுணர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுதொடர்பான வழக்கை வியாழக்கிழமை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இணையவழி மருந்து விற்பனையை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை வரும் 31-ஆம் தேதிக்குள் வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தின் கீழ், வரைவு விதிமுறைகளை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வரைவு விதிமுறைகள், வரும் 31-ஆம் தேதிக்குள் இறுதிசெய்யப்பட்டு விடும். இதுதொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.
இதையடுத்து, மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை, பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக் கூடாத மருந்துகள் உள்பட அனைத்து மருந்துகளையும் இணையவழியில் விற்பனை செய்வதை முறைப்படுத்தக் கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கடந்த 2015-ஆம் ஆண்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.