கொல்கத்தா: பெங்காலி ஒருவர் பிரதமராக வர முடியும் என்றால் அதற்கு தகுதியானவர் மம்தா பானர்ஜி ஒருவரே என மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பேசியிருப்பது பாஜகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில், நேற்று முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர் திலிப் கோஷிடம், எதிர்காலத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து யாரேனும் பிரதமர் பொறுப்புக்குத் தகுதியானவர்கள் உள்ளார்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜியாகதான் இருக்க முடியும். அவர் ஆரோக்கியமாகவும், வாழ்க்கையில் வெற்றிப்பெறவும் பிரார்த்தனை செய்கிறேன். ஏன் என்றால் எங்களுடைய மாநிலத்தின் தலையெழுத்து மம்தா பானர்ஜியை சார்ந்துள்ளது என்று பதிலளித்தார்.
பாஜகவில் இருந்து யாரும் மாநிலத்தில் பிரதமர் வேட்பாளருக்குத் தகுதியானவர் இல்லையா என செய்தியாளர்கள் கேட்ட மற்றொரு கேள்விக்கு,“ பிரதமர் வேட்பாளர் போட்டியில் தற்போது முதல் இடத்தில் இருப்பது மம்தா பானர்ஜிக்குதான். அவருக்கு பின்னால் அதாவது பிற்காலத்தில் பாஜகவில் இருந்து வரலாம். ஆனால், மம்தாவுக்குதான் முதல் வாய்ப்பு. மேற்கு வங்க மக்களும் அவரைத்தான் தேர்வு செய்வார்கள் என்றவர் ஜோதிபாசுவுக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்தநிலையில், அவரது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே அதை அனுமதிக்கவில்லை.
மேற்கு வங்கத்தின் சார்பில் முதல் பெங்காலி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என்ற பெருமையை பெற்றோம், அடுத்ததாக மேற்கு வங்கத்தில் இருந்து பிரதமராக ஒருவரைப் பெற இருக்கிறோம் என்றும் அதற்கான நேரம் இது என தெரிவித்த திலிப், மம்தா பானர்ஜி அடுத்த பிரதமராக வாழ்த்துகிறேன். அதேசமயம், 2019 ஆம் ஆண்டில் மோடி மீண்டும் நாட்டை வழிநடத்த வேண்டும் என்றார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என கடுமையாக செயல்பட்டு வரும் பாஜகவினருக்கு திலிப் கோஷ் பேச்சு பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.