பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.


புது தில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லட் சமூக ரீதியாக, பொருளதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த சட்ட திருத்த மசோதா மீது இன்று பிற்பகலில் விவாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி-வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், உயர் ஜாதியினரின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் நோக்கில் மத்திய அரசு மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஏற்கெனவே, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இப்போது கூடுதலாக பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது. இதனால், இடஒதுக்கீட்டு உச்சவரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கும். இதுதொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு தற்போது எந்த வகையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமெனில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, அரசமைப்புச் சட்டத்தின் 15, 16-ஆவது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இடஒதுக்கீடு உச்சவரம்பை அதிகரிக்க வழி ஏற்படுத்தப்படும். இந்த மசோதா நிறைவேற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

பொதுப் பிரிவினரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் அல்லது 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கே இந்த இடஒதுக்கீட்டு பலன்கள் கிடைக்கும். 

பிராமணர், ராஜபுத்திரர்கள், ஜாட், மராத்தா உள்ளிட்ட உயர் ஜாதியினர் இந்த நடவடிக்கையால் பலனடைவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக வியூகம்: அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், உயர் ஜாதியினர் முன்வைத்து வரும் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை. அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்காவிட்டால், அவை உயர் ஜாதியினரின் அதிருப்திக்கு ஆளாகும் என்று பாஜக நம்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் நேர ஏமாற்று வித்தை: பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முடிவு, பாஜகவின் தேர்தல் நேர ஏமாற்று வித்தைகளில் ஒன்று என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com