பாட்னா: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த திரைப்படம் தொடர்பாக நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய பாட்னா கீழ்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடகத் துறை ஆலோசகராக கடந்த 2004 முதல் 2008 வரை இருந்த சஞ்சய் பாரு, தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் எழுதிய புத்தகத்தைத் தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில், பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் வேடத்தை ஏற்று நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸின் உட்கட்சிப் பிரச்னைக்கு மன்மோகன் சிங் பலியாகிவிட்டார் என்பது போன்ற பல சர்ச்சைக்குரிய காட்சிகள் அந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டன.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த திரைப்படம் தொடர்பாக நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய பாட்னா கீழ்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கறிஞர் சுதீஷ் குமார் ஓஜா என்பவர் கடந்த 2 - ஆம் தேதி அன்று பாட்னா கீழ்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடந்தார். அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த திரைப்படமான 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படத்தில் மன்மோகன் சிங் மற்றும் சஞ்சய் பாரு கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர் மற்றும் அக்ஷய் கண்ணா இருவரும் அவர்களது புகழுக்கு களங்கம் விளைவித்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமென்று பாட்னா கீழ்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.