புது தில்லி: பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும் என்று திமுகவின் கனிமொழி எம்.பி., மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
மாநிலங்களவையில் புதனன்று நடைபெற்று 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாத்தில் கலந்து கொண்டு திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது வரலாற்றுத் தவறாக அமையும். தாங்கள் படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கிறது.
நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. நாட்டில் ஒருவர் தன்னுடைய மதம், பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் சாதியை மாற்ற முடியாது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரியானது அல்ல என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. அப்படியிருக்க எதன் அடிப்படையில் 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடித்தது? 10% இட ஒதுக்கீடு மசோதாவை கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.