இந்திய அரசின் முத்திரை இருக்க வேண்டிய இடத்தில் தாமரையும் பிரதமர் மோடியின் முகம் இருக்கும் திட்டத்துக்கு வரி செலுத்துபவர்களின் பணத்தை செலவிடமாட்டேன் என்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து விலகுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில்,
"இந்திய அரசின் முத்திரை இருக்க வேண்டிய இடத்தில் தாமரை புகைப்படத்துடன் பிரதமர் மோடியின் முகம் இருக்கும் திட்டத்துக்கு நாம் ஏன் பங்களிக்கவேண்டும். மாநிலத் திட்டங்களுக்கு தேவையான நிதி வரிசெலுத்துபவர்களிடம் இருந்தே வருகிறது. அதனை மத்திய அரசின் திட்டத்துக்கு செலவிட அனுமதிக்க முடியாது. மேற்கு வங்கத்தில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை இந்த அரசு கவனித்துக் கொள்கிறது.
மத்திய அரசு சிபிஐ, ஆர்பிஐ மற்றும் வங்கிகளை முடித்துக்கட்டியது. இதோடு, இந்த திருட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது" என்றார்.
இதன்மூலம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து தெலங்கானா, தில்லி, ஒடிஷா, கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலமும் விலகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் 2017-இல் இருந்து ஸ்வாஸ்திய சாதி திட்டம் எனும் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் குடிமக்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடிப்படையில் சேவை அளித்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், அடிப்படை மருத்துவக் காப்பீடாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சிகிச்சைக்காக ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.