புது தில்லி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கின் உச்சவரம்பு வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20 லட்சமாகவும் இதர பகுதி மாநிலங்களுக்கு ரூ.40 லட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கும் குறைவான வருமானம் ஈட்டும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த உச்சவரம்பை ரூ.40 லட்சமாக அதிகரித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
மேலும், சிறு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் தொகுப்பு சலுகைத் திட்டத்துக்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இவ்விரு முடிவின் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய லாபம் அடையும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகளைக் களைய 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து முடிவெடுப்பது என்று முடிவடுக்கப்பட்டிருப்பதாகவும் அருண் ஜேட்லி கூறினார்.