புது தில்லி: சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடனான எல்லைப் பகுதிகளை சிறப்பாக ராணுவம் கையாண்டு வருவதாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் உள்ள சூழலை இன்னும் மேம்பட வைக்க வேண்டியது அவசியம். அங்கு அமைதியை ஏற்படுத்த உதவும் பணியை மட்டுமே ராணுவம் செய்து வருகிறது.
பொதுவாக காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளாலே பாதிக்கப்படுகின்றனர். எனவே நல்ல கட்டுப்பாட்டின் கீழ் காஷ்மீர் நிலைமை கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள சூழலை நாங்கள் சிறப்பாக கையாண்டு வருகிறோம்.
ராணுவத்தினர் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.