நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மொத்தம் 5 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வியாழக்கிழமை கூறியதாவது:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 8-ஆம் தேதி வரை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. மக்களவையில் ஜனவரி 8-ஆம் தேதி தவிர்த்து மொத்தமுள்ள 29 நாட்களில் 17 அமர்வுகள் நடைபெற்றன. மாநிலங்களவையில் ஜனவரி 9-ஆம் தேதி தவிர்த்து மொத்தமுள்ள 30 நாட்களில் 18 அமர்வுகள் நடைபெற்றன. இதில் அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டன.
இதன்மூலம் மக்களவையின் பங்களிப்பு 47 சதவீதமாகவும், மாநிலங்களவையின் பங்களிப்பு 27 சதவீதமாகவும் உள்ளது. இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 5 மசோத்தாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 124-ஆவது குடியுரிமை சட்டத் திருத்தம், முத்தலாக் தடைச் சட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
இந்த கூட்டத் தொடரின் போது இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 17 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 12 மசோதாக்களில் 14 நிறைவேற்றப்பட்டது. அதுபோன்று மாநிலங்களவையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்று தெரிவித்தார்.