ராஜஸ்தான்: கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் ராஜஸ்தானில் நடந்திருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியோடு வந்த கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம் சொல்லில் வடிக்க முடியாததாக உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆண் செவிலியர், குழந்தையை வெளியே எடுக்கும் போது அலட்சியமாக செயல்பட்டதால், குழந்தை இரண்டாக துண்டிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் தலை மட்டும் கர்ப்பிணியின் கருப்பைக்குள்ளேயே தங்கிவிட்டது.
குழந்தையின் தலையில்லாத உடலை பிணவறையில் வைத்த ஊழியர்கள், உடனடியாக அப்பெண்ணை மேல்சிகிச்சைக்காக ஜெய்சல்மேருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துவிட்டனர்.
அங்கு அறுவை சிகிச்சை செய்து கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவின் தலை வெளியேற்றப்பட்டது. மருத்துவமனையின் அலட்சியத்தால், குழந்தை மரணம் அடைந்ததோடு, கர்ப்பிணியின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டது.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.