தில்லியில் சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் இன்று மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மாவின் பதவி வியாழக்கிழமை அதிரடியாக பறிக்கப்பட்டது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அலோக் குமார் வர்மாவின் 2 ஆண்டு கால பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவியை இழந்துள்ளார். சிபிஐ இயக்குநர் ஒருவர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பதவி இழப்பது சிபிஐ வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இதனிடையே, சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை, நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதன் இயக்குநராக நாகேஸ்வர ராவ் இன்று மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.