மோடியுடன் மலேசிய ஆளும் கட்சியினர் சந்திப்பு
மலேசியாவின் ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தில்லியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ரெய்சினா பேச்சுவார்த்தை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசிய நாட்டின் ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள மக்கள் நீதி கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான அன்வர் இப்ராஹிம் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.
அதைதொடர்ந்து அவர் பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மலேசிய எம். பி. க்கள் அன்வர் இப்ராஹிம், கேசவன் சுப்ரமணியன், சந்தார குமார் ராமநாயுடு ஆகியோர் பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிராந்திய மற்றும் உலக பிரச்னைகள் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற கட்சி தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அன்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். தனது வாழ்த்துகளை மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவிடம் தெரிவிக்கும்படியும் மோடி கேட்டுக் கொண்டார்.
மேலும், கடந்த மே மாதம் மலேசியா சென்றிருந்தபோது அந்நாட்டு தலைவர்களை சந்தித்தது குறித்து மோடி நினைவு கூர்ந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 1991-98 ஆம் ஆண்டு வரை மலேசியாவின் துணை பிரதமராகவும், 1993-98 ஆம் ஆண்டு வரை நிதியமைச்சராகவும் அன்வர் இப்ராஹிம் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.