உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணி இறுதி முடிவாக இல்லாமல், தேர்தல் நேரத்தில் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் இன்று (சனிக்கிழமை) கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும், ராகுல் மற்றும் சோனியா போட்டியிடும் ரே பரலி மற்றும் அமேதி தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்தனர். இதனால், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் கேள்விக்குறியானது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,
"இது இறுதி முடிவாக இருக்காது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரிசீலனை செய்யப்படலாம். உத்தரப் பிரதேசத்தில் உண்மையான பரந்த கூட்டணி அமையும். தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சி தனது சொந்த பலத்துடன் தேர்தலில் போட்டியிடும்" என்றார்.