இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் நீண்ட கால திட்டம்: ஜிக்னேஷ் மேவானி
இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் நிலுவையில் உள்ள நீண்ட கால திட்டம் என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% சதவீத இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாவுக்கு நேற்று (சனிக்கிழமை) ஒப்புதல் அளித்தார். இதுகுறித்து, குஜராத் சட்டப்பேரவை உறுப்பினரும், தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி இன்று கூறுகையில்,
"சாதி ரீதியிலான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் படி தான் இது. இந்த நடவடிக்கை எனக்கு கவலையளிக்கிறது. இதேபோன்று தான் பட்டியலின மக்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் கவலையளிக்கிறது.
இந்திய அரசமைப்பை திருத்தி, சாதி ரீதியிலான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் நிலுவையில் உள்ள நீண்ட கால திட்டம். இதர சமூகத்தில் இருக்கும் ஏழைகள் பலன் பெறுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இடஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பதற்கானது அல்ல.
சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கும் பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிரதிநித்துவ அந்தஸ்தை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இடஒதுக்கீடு" என்றார்.