மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து பாஜக வேட்பாளர் தொடுத்த வழக்கில், குஜராத் உயர்நீதிமன்றம் 6 புகார்களைப் பதிவு செய்துள்ளது.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அகமது படேல் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் பல்வந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பெலா திரிவேதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற அகமது படேல் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தாரா, இல்லையா? 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாதவையாக மாறியதா, இல்லையா? காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 2 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா, இல்லையா? என மொத்தம் 6 புகார்களை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி இந்த வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 18-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
முன்னதாக, பல்வந்த் சிங் ராஜ்புத் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் அகமது படேல் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்ததால், உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்குமாறு குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, அகமது படேல் தாக்கல் செய்த புதிய மனுவையும் குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
அவர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது.