அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிபிஐ இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய தில்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. அப்படிப்பட்ட ராகேஷ் அஸ்தானா தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை தேர்வுக் குழு நீக்கியுள்ளது. விசாரணையை எதிர்கொண்டு வரும் ராகேஷ் அஸ்தானா, அலோக் வர்மாவின் பதவிநீக்கத்துக்கு காரணம் என்று தெரிவிப்பது விநோதமாக இல்லையா?
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கைதான், இதற்கு முழு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிபிஐ இயக்குநரை நியமிக்கவோ அல்லது பதவி நீக்கம் செய்யவோ மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் முடியாது. மத்திய அரசின் சொற்பேச்சை கேட்டு, ஊழல் கண்காணிப்பு ஆணையம் செயல்படுகிறது.
ரஃபேல் விவகாரம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ஆதலால், உயர்நிலை தேர்வுக் குழுக் கூட்டத்தை உடனடியாக மீண்டும் கூட்ட வேண்டும் என்றும், சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவை மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்துகிறது. ஏற்கெனவே 77 நாள்களை, தனது பணிக்காலத்தில் இழந்து விட்டதற்கு, ராகேஷ் அஸ்தானாவுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றார் அபிஷேக் சிங்வி.