குடியுரிமை சட்டத் திருத்த மசோதா விவகாரம்: மத்திய அரசுக்கு உல்ஃபா அமைப்பு எச்சரிக்கை

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், மத்திய அரசுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று உல்ஃபா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவு எச்சரித்துள்ளது

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், மத்திய அரசுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று உல்ஃபா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவு எச்சரித்துள்ளது.
 வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பாரசீகர்கள், சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி நிறைவேற்றியது.
 இதையடுத்து, அஸ்ஸாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில், உல்ஃபா அமைப்பின் ஒரு பிரிவு தலைவர் மிருணாள் ஹஸாரிகா, குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், "அஸ்ஸாமில் அனைத்துப் பிரிவு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தையை நிறுத்தி விடுவோம்' என்றார்.
 உல்ஃபா பொதுச் செயலர் அனூப் சேதியா கூறுகையில், "நாடாளுமன்றத்தில் இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அஸ்ஸாம் இளைஞர்கள் ஆயுதங்களை கையில் ஏந்த வேண்டியிருக்கும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com