பம்பை: சபரிமலையில் திங்களன்று மகரஜோதி தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் மண்டல பூஜை தொடங்கி மகர விளக்கு வழிபாடு வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.
இந்நிலையில் சபரிமலையில் திங்களன்று மகரஜோதி தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகர விளக்கு பூஜையின் இறுதிநாள் வழிபாடான மகர ஜோதி தரிசனம் திங்களன்று நடைபெறுகிறது. இதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
இதற்கான திருவாபரண ஊர்வலம் பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து சனியன்று சபரிமலை நோக்கி புறப்பட்டது. ஊர்வல பாதை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. திங்கள் மாலை திருவாபரண ஊர்வலம் சபரிமலை சன்னிதானத்தை சென்றடையும்.
ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்ட பின்னர் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். அதனையடுத்து இந்த ஆண்டு மகர விளக்கு சீசன் முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.