சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியானது அந்தக் கட்சிகள் நிலைத்திருப்பதற்காக மேற்கொண்ட சுயநல முடிவே தவிர, நாட்டு நலனுக்கானது அல்ல என்று பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தில்லியில் சனிக்கிழமை கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. அவர்களால் தனித்தனியாக பிரதமர் மோடியை எதிர்கொள்ள இயலாது. மோடி எதிர்ப்பு ஒன்றே அவர்கள் கூட்டணிக்கான அடித்தளம். நாட்டு மக்களின் நலன், உத்தரப் பிரதேச மாநில நலனுக்காக இவர்கள் கூட்டணி அமைக்கவில்லை' என்றார்.
ஊழல்வாதிகளின் கூட்டணி: உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்காக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளது கட்டாயத்தின் காரணத்தால் என்றும் அது ஊழல்வாதிகளின் கூட்டணி என்றும் பாஜக விமர்சித்துள்ளது.
உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெüர்யா கூறுகையில், ""ஊழல்வாதிகளின் கூட்டணியாக சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உள்ளது. மக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக அதிக தொகுதிகளைக் கைப்பற்றும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவு முழுவதும் பிரதமர் மோடிக்கே உள்ளது. அவர்களின் கூட்டணி மக்களவைத் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது'' என்றார்.