நாட்டின் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அண்மையில் தில்லி, உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் 2 பேரின் காவலை வரும் 22-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தில்லி உள்பட வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தில்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 10 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த மாதம் 26-ஆம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்ட 10 பயங்கரவாதிகளிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர், கை துப்பாக்கிகள், துப்பாக்கித் தோட்டாக்கள் உள்பட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இராக், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீதுள்ள ஈர்ப்பினால் அவர்கள் இவ்வாறு திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த 10 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அனுமதி கோரியது. அதையடுத்து 10 பேரையும் 12 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்து.
அவர்களது காவல் முடிந்த நிலையில், அவர்களில் சாஹிப் இப்திகார் (26) மற்றும் முப்தி முகம்மது சோஹைல் (29) ஆகிய இருவரை மட்டும் மேலும் விசாரிப்பதற்காக, இருவரின் காவலை நீட்டிக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அனுமதி கோரியது.
இதற்கு பயங்கரவாதிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அதைக் கேட்ட நீதிபதி, அவர்கள் இருவரையும் வரும் 22-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.