ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் சர்வதேச ஒட்டக விழா சனிக்கிழமை தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த விழாவைக் காண்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
ஜுனாகர் கோட்டையில் இருந்து கர்ணி சிங் மைதானம் வரை செல்லும் விழா ஊர்வலத்தை பிகானீர் மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அந்த மைதானத்தில் ராஜஸ்தான் பாரம்பரிய நடனம், ஒட்டகச் சவாரி, ஒட்டகத்தை அலங்கரிப்பது, ஒட்டக கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவில் ராஜஸ்தான் பாரம்பரிய உடை அணிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் இந்த விழாவில், பல்வேறு இடங்களின் பாரம்பரிய நடன கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.