மும்பை: ஓடும் ரயில் பயணிகள் ஏறி, இறங்குவதைத் தடுப்பதற்காக மேற்கு மண்டல ரயில்வே புது நடைமுறை ஒன்றைக் கொண்டு வர இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில்குறிப்பாக மும்பையில் மின்சார ரயில்கள் என்பது முக்கியமானதொரு போக்குவரத்து அம்சமாகும். அதேசமயம் ஓடும் ரயில்களில் பயணிகள் ஏறி இறங்குவதால் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.
இந்நிலையில் ஓடும் ரயிலில் பயணிகள் ஏறி, இறங்குவதைத் தடுப்பதற்காக மேற்கு மண்டல ரயில்வே புது நடைமுறை ஒன்றைக் கொண்டு வர இருக்கிறது.
அதன்படி மின்சார ரயில்களின் கதவுகளில் நீல நிற விளக்குகள் பொருத்தப்படும் .ரயிலானது ஒரு குறிப்பிட்ட வேகத்தைப் பிடிக்கும்போது இந்த விளக்குகள் ஒளிரத் தொடங்கும். இது பயணிகள் ரயிலில் ஏறுவதோ இறங்குவதோ உயிருக்கு ஆபத்து என்று எச்சரிப்பதாக அமையும்.
இந்த எச்சரிக்கையானது ஒரு கூடுதல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வினை பயணிகள் மனதில் உண்டாக்கி, அவ்வாறு செயல்படுவதைத் தடுக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தற்போது இந்த புதிய நீல நிற விளக்குகளை ரயில்களில் பொருத்தும் பணி தொடங்கியிருக்கிறது.