உ.பி.யில், சமாஜவாதியுடன் கூட்டணி அமைத்தது ஏன்? என்பதற்கு பகுஜன் சமாஜவாதி கட்சித் தலைவர் மாயாவதி விளக்கமளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சித் தலைவர்களும் அண்மையில் வெளியிட்டனர். இக்கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன.
எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று இரு கட்சிகளும் கூறியுள்ளன. இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பாஜக எவ்வாறு வியூகம் வகுத்திருந்ததோ, அந்த வகையிலேயே தங்களை புறக்கணித்து சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து லக்கெனளவில் பகுஜன் சமாஜவாதி கட்சித் தலைவர் மாயாவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜவாதி கட்சியின் நோக்கம். தனிப்பட்ட நலனை கருதாமல் உ.பி.யில் இருந்து பாஜகவை வெளியேற்றும் நோக்கில் சமாஜவாதியுடன் கூட்டணி. சுதந்திரத்திற்கு பெரும்பாலான காலம் நாட்டை ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி நாட்டில் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்ய ஒரு வலுவான திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.