கர்நாடக அரசு நிலையாக உள்ளது என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க கடைசிக்கட்ட முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை முறியடித்து ஆட்சியை தக்கவைக்க ம.ஜ.த., காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப் பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு 113 உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். காங்கிரஸின் 80, ம.ஜ.த.வின் 37, பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என தலா ஒரு உறுப்பினர்கள் என மொத்தம் 119 எம்எல்ஏக்களின் ஆதரவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த. -காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பலத்தைவிட கூடுதலாக 6 எம்எல்ஏக்கள் மட்டுமே கூடுதலாக உள்ளனர். எனவே, கூட்டணி அரசை கவிழ்க்க ஆட்சிக்கு வந்தது முதலே தொடர் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோர் மும்பையில் முகாமிட்டுள்ளதாகவும், அவர்கள் உள்பட 6 எம்எல்ஏக்கள் விரைவில் பாஜகவில் சேரவிருப்பதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதுதவிர, சில எம்எல்ஏக்கள் பாஜகவின் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுவதால், கூட்டணியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இந்த நிலையில், பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற கர்நாடக பாஜகவின் 104 எம்எல்ஏக்கள், கடந்த சில நாள்களாக புதுதில்லியிலேயே முகாமிட்டுள்ளனர். தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுவதால் பாஜக எம்எல்ஏக்கள் புதுதில்லியில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கர்நாடக அரசு நிலையாக உள்ளது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு முழுமையாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் என்றார்.