பத்திரிகையாளர் சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேரா சச்சா செளதா அமைப்பில், குர்மீத் ராம் ரஹீமால் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, அடையாளம் தெரியாத நபர் எழுதிய கடிதம் ஒன்றைப் பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி தனது 'பூரா சாச்' பத்திரிகையில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடைய இல்லத்துக்கு வெளியே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக 2003-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், குர்மீத் ராம் ரஹீம் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மேலும், குல்தீப் சிங், நிர்மல் சிங், கிருஷ்ணன் லால் ஆகிய 3 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் கடந்த 11-ஆம் தேதி குர்மீத் ராம் ரஹீம் உட்பட நால்வரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார். மேலும், தண்டனை விவரம் வரும் 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம், கடந்த 2017 முதல் ரோஹ்தாக் சுனாரியா சிறையில் 20 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். இதனால், அவர் இன்று காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைதொடர்ந்து, தண்டனை குறித்தான விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி, பத்திரிகையாளர் சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உள்பட நால்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.