லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை பிப்ரவரி மாத இறுதிக்குள் பரிந்துரை செய்யவேண்டும் என்று தேடுதல் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) கெடு விதித்தது.
லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை பரிந்துரை செய்வதற்கான தேடுதல் குழு அமைக்க இதுவரையிலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து மத்திய அரசு வரும் 17-ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எல்என் ராவ் மற்றும் எஸ்கே கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், "போதிய மனித வளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது என ஒரு சில பிரச்னைகள் உள்ளது. அதனால், தேடுதல் குழுவால் இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட ஆலோசனைகளை மேற்கொள்ளமுடியவில்லை" என்றார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இந்த பணியை நிறைவடையச் செய்ய, தேடுதல் குழுவுக்கு போதிய மனிதவளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுக்குமாறு மத்திய அரசை அறிவுறுத்தியது. மேலும், பிப்ரவரி மாத இறுதிக்குள் லோக்பால் அமைப்பு உறுப்பினர்களை பரிந்துரை செய்யவேண்டும் என்றும் தேடுதல் குழுவுக்கு கெடு விதித்தது.
இதையடுத்து, இந்த வழக்கு மார்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.