புதுதில்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விரைவில் உடல் நலம் பெற விரும்புகிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்காக சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அருண் ஜேட்லி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்க பதிவில், “அருண் ஜேட்லி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து நான் வருத்தம் அடைந்தேன். கொள்கைகளின் அடிப்படையில் தினமும் நாங்கள் மோதிக்கொள்வோம்.
இருப்பினும், நானும், காங்கிரசும் அவரை விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் 100 சதவீதம் நாங்கள் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் அருண் ஜேட்லி நாடு திரும்புவார் எனவும், அவரது அமைச்சரவை இலாகா வேறு யாருக்கும் கொடுக்கப்படாது எனவும் தகவல்கள் கூறுகின்றன.