பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்யில் துவங்கிய கும்பமேளாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.
அவருடன், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம் நாயக் ஆகியோரும் வழிபாடு நடத்தினர்.
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா கடந்த 15-ஆம் தொடங்கியது. இதில் உலகெங்கிலும் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்த கும்பமேளா பண்டிகைக்கு "மனிதகுலத்தில் இன்றியமையாத கலாசார பாரம்பரிய விழா" என்று யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்தது.
உலகில் மத ரீதியாக நடத்தப்படும் மாபெரும் விழாக்களில் ஒன்றாக கும்பமேளா கருதப்படுகிறது.
நாசிக், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, ஹரித்வார் ஆகிய நகரங்களில் சுழற்சி முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடத்தப்படுகிறது. அதில் பிரயாக்ராஜில் மூன்று நதிகள் சங்கமிக்கும் "சங்கம்' பகுதியில் நடத்தப்படும் கும்பமேளா, மற்ற இடங்களைக் காட்டிலும் சிறப்புமிக்கதாகும்.