பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவது கருத்து சுதந்திரமல்ல எனவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பவர்கள், வேண்டுமென்றே அனைத்தையும் எதிர்க்கும் மனப்போக்குடன் செயல்படுகின்றனர் எனவும்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள அருண் ஜேட்லி, முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசை வேண்டுமென்றே விமர்சிக்கும் எதிர்ப்பாளர்கள், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அதன்மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வலுவிழக்கச் செய்து, ஜனநாயகத்தை சீர்குலைக்கின்றனர். கருத்துச் சுதந்திரம், விமர்சிக்கும் உரிமை போன்றவை தான் ஜனநாயகத்தின் முக்கிய கூறுகளே தவிர, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது, சட்டரீதியிலான அமைப்புகளை அழிப்பது போன்றவை அல்ல.
தற்போதைய மத்திய அரசால் எந்த நன்மையும் செய்ய இயலாது என்று நினைப்பவர்களால், நாட்டுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் பங்களிக்க முடியாது. மாறாக, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மூலமாகத்தான் தேசத்தை கட்டமைக்க முடியும்.
வேண்டுமென்றே விமர்சிக்கும் மனப்பான்மை உடையவர்களால் நன்மை செய்ய இயலாது. அவ்வாறு விமர்சிப்பவர்கள், தாங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறோம் என்பதை உணரும் மனசாட்சி இல்லாதவர்கள்.
தேசத்தின் பொது நலனுக்கு எதிராகச் செயல்படும்போதிலும், அது தேசத்துக்கு சாதகமானதாக தோற்றமளிக்கும் வகையில் அவர்களால் பொய்யாக விவாதிக்க இயலும். அவர்களால் ஊழலைக் கூட நியாயப்படுத்த முடியும். எப்போது தங்களுக்கு என்ன தேவையோ, அதற்கேற்றாற்போல் மாறிக் கொள்ளும் இரட்டை நிலையை அவர்களால் கடைப்பிடிக்க இயலும் என்று அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.