இந்திய கடற்படையின் ஒட்டுமொத்த பலத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிதாக 3 கடற்படை விமானப் பிரிவுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் மற்றும் குஜராத்தில், கடற்படையின் 3 புதிய விமானப் பிரிவுகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்துடன், கேரளம் மற்றும் அந்தமானில் ஏற்கெனவே உள்ள டார்னியர் விமான கண்காணிப்பு படைப் பிரிவில் கூடுதல் விமானங்களை சேர்க்கவும், அவற்றுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கடற்படைக்கு புதிதாக 12 டார்னியர் ரக விமானங்கள் கொள்முதல் செய்வதற்காக ஏற்கெனவே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விமானங்கள் விரைவில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
அந்த கண்காணிப்பு ரக டார்னியர் விமானங்களில் மேம்படுத்தப்பட்ட தொலையுணர் கருவிகள், கண்ணாடியால் மூடிய வகையிலான விமானி இருக்கைப் பகுதி, நவீன கண்காணிப்பு ரேடார் உள்ளிட்ட புதிய வசதிகள் உள்ளன. இதன்மூலம், இந்திய கடற்பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்படுவதுடன், பயங்கரவாதிகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் குறித்த கண்காணிப்புத் தகவல்கள் கிடைக்கப்பெறுவதால், கடற்பகுதி கண்காணிப்பு அதிகரிக்கும்.
கூடுதல் டார்னியர் விமானங்கள் இணைக்கப்படுவதால், 7,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக உள்ள இந்திய கடலோர பகுதியின் பாதுகாப்பை கடற்படையால் வலுப்படுத்த இயலும் என்று அந்த அதிகாரிகள் கூறினர்.